Tuesday, September 25, 2007

ஊத்துக்காடு எல்லையம்மன்!

காஞ்சிபுரம் சுற்று வட்டாரத்தை ஆண்டுகொண்டிருந்த மன்னன் ஒருவன் (சோழ சிற்றரசன் என்கிறார்கள்) ஒரு நாளைக்கு வேட்டைக்குப் போனான். அடர்ந்த வனம். வனத்துக்குள் நீண்டதூரம் சென்றுவிட்ட மன்னனுக்கு நாக்கு வறண்டுவிட்டது. அருகில் நீர்நிலை ஏதுமில்லை. தனக்கு துணையாக பாதுகாவலர்களை அழைத்து வராத மன்னன் பைரவன் என்ற பெயர் கொண்ட வேட்டைநாய் ஒன்றை மட்டுமே துணையாக அழைத்து வந்திருந்தான்.

நாக்கு வறண்டு மயக்க நிலைக்கு போய்விட்ட மன்னன் குதிரையை விட்டு இறங்கி ஒரு மரநிழலில் ஓய்வெடுக்கத் தொடங்கினான். மன்னனின் வேட்டைநாய் நீர்நிலை அருகில் இருக்கிறதா என்று தேடத்தொடங்கியது. மன்னனுக்கோ தான் உயிர் பிழைப்பதே கடினம் என்ற சந்தேகம் வரத்தொடங்கியது.

அந்த நேரத்தில் காட்டின் நடுவே ஓரிடத்தில் ஊற்று இருப்பதை பைரவன் கண்டுபிடித்தது. அந்த இடத்துக்கு மன்னனை அழைத்து வந்தது. மன்னன் நீர் அருந்த நீர்நிலையில் காலைவைத்தபோது நீர்நிலையின் மையத்தில் இருந்து எலுமிச்சை பழங்கள் வரிசையாக மன்னனை நோக்கி மிதந்து வந்தது. ஆச்சரியமடைந்த மன்னன் நீர் அருந்திவிட்டு வனத்தை விட்டு வெளியே சென்று சில வலைஞர்களை அந்நீர்நிலைக்கு அழைத்து வந்தான்.

நீர்நிலையின் நடுவே ஏதோ சக்தி இருப்பதாகவும் அந்த சக்தியால் தான் எலுமிச்சை பழங்கள் உருவாகி மிதந்து வருவதாகவும் மன்னன் நினைத்தான். வலைஞர்கள் நீர்நிலையின் மையத்தில் வலையைப் போட்டு இழுக்க வலையில் இருந்தது ஒரு அம்மன் சிலை.

அந்த அம்மன் சிலையை அந்த நீர்நிலையின் கரையிலேயே பிரதிஷ்டை செய்து மன்னன் வணங்கினான். காட்டுக்கு நடுவே ஊற்றில் இருந்து வந்த அம்மன் என்பதால் அந்தப் பகுதியை ஊற்றுக் காடு என மக்கள் அழைக்க ஆரம்பித்தார்கள். பின்னர் அதுவே ஊத்துக்காடு என மருவியது. அந்த நீர்நிலையை கண்டுபிடித்தது பைரவன் என்ற வேட்டைநாய் என்பதால் பைரவனின் பெயரில் பைரவன் குளம் என்று அந்நீர்நிலை அழைக்கப்படுகிறது. இன்றும் ஊத்துக்காடுக்கு சென்றால் தாமரைப் பூக்கள் நிரம்பிய பைரவன் குளத்தை நீங்கள் காணலாம்.

இச்சம்பவங்கள் நடந்து பல ஆண்டுகள் கழித்து மன்னனின் பாதுகாப்பாளர்களில் ஒருவராக பணியாற்றிய நாகல் என்பவரின் கனவில் அம்மன் வந்தார். “என்னை இந்த ஊத்துக்காடுக்கு கிழக்கு எல்லையில் பிரதிஷ்டை செய்து கோயில் அமைத்தால் இந்த ஊர் எல்லையைக் காத்து நின்று மக்களுக்கு அருள்பாலிப்பேன்” என்று வாக்களித்தார். தன் கனவில் வந்த அம்மனின் ஆணையை ஏற்று நாகல் என்பவரால் 1600 வாக்கில் ஊத்துக்காடு எல்லையம்மனுக்கு ஆலயம் எழுப்பப் பட்டது.

கருவறையில் எல்லையம்மனுக்கு பெரிய சிலை இருந்தாலும் மன்னனால் கண்டெடுக்கப்பட்ட பழைய சிறிய சிலையும் அருகிலேயே இருக்கிறது.

ஊத்துக்காடு சென்னையிலிருந்து காஞ்சி செல்லும் வழியில் வாலாஜாபாத்துக்கு மூன்று கி.மீ முன்பாகவே இருக்கிறது. ஆடி மாதம் இந்த கோயிலுக்கு விசேஷம் என்றாலும் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தின் எல்லா பகுதி சிறுதெய்வங்களுக்கும் செய்யப்படும் முறையிலேயே இங்கேயும் பொங்கல் வைத்தல், ஆடு-கோழி பலியிடல் போன்ற வழிபாட்டுமுறை அமைந்திருக்கிறது. அர்ச்சகர்களாக பார்ப்பனரல்லாத சமூகத்தினர் பணியாற்றுகிறார்கள்.

எல்.ஆர். ஈஸ்வரி ஒரு பக்திப் பாடலில் 108 அம்மன் பெயர்களை வரிசையாக சொல்லுவார் இல்லையா? அதில் ஊத்துக்காடு எல்லையம்மனும் இருப்பார். ஊத்துக்காடு வாசிகள் இதை பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள் :-)

வேம்புலியம்மன்

"என் புள்ளை சீரியஸா கெடக்குதே. அம்மா காப்பாத்தும்மா"

"என் பொண்ணுக்கு கல்யாணம் சீக்கிரமா ஆகணும்"

"ஆத்தா நான் பத்தாவது படிக்கிறேன். நல்லபடியா பாஸ் ஆகோணும்"

"எம்மவனுக்கு நல்ல வேலை கெடைக்கணும்"

"என்னோட வியாதியெல்லாம் தீர்ந்து நல்லபடியா ஆரோக்கியமா வாழணும்"

- பிரார்த்தனைகள் பலவகை. பிரார்த்திக்கப்படும் பிரார்த்தனைகள் எல்லாமே நிறைவேறி விடுகின்றதா என்ன?

அந்த வேப்பமரத்தின் கீழே பிரார்த்திக்கப்படும் பிரார்த்தனைகள் அனைத்துமே நிறைவேறிக் கொண்டிருந்தது. பிரார்த்தித்தவர்கள் விவசாயக் கூலிகள். அன்றாடங் காய்ச்சிகள். அப்பகுதி மக்களுக்கு அந்த வேப்பமரம் தான் கற்பகத்தரு.

சென்னை கிராமமாக இருந்த காலம் அது. சென்னைக்கு அருகில் பழவந்தாங்கல் என்கிற கிராமம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை வயல் பரப்பு. வயல்களுக்கு நடுவே அந்த வேப்பமரம். அந்த மரத்துக்கு கீழே நின்று என்ன பிரார்த்தனை செய்தாலும் அது நிறைவேறிவிடும் என்று அந்த கிராமத்து வாசிகளுக்கு நம்பிக்கை. அம்மரத்தையே அம்மனாக வழிபட ஆரம்பித்தார்கள்.

ஒருநாள் காலை விவசாயி ஒருவர் அந்த விளைநிலத்தை உழுதுக் கொண்டிருக்கிறார். களைப்பேற்படும் போதெல்லாம் தூரத்தில் தெரியும் வேப்பமரத்தை பார்ப்பார். அம்மரத்தை பார்க்கும் போதெல்லாம் தன் தாயை பார்ப்பது போன்ற உணர்வு அவருக்கு. களைப்பு நீங்கி மீண்டும் உழைப்பார்.

உழுது கொண்டிருந்த போது கலப்பை எது மீதோ பட்டு சத்தம் எழுப்பியது. அப்பகுதியில் குன்றுகள் அதிகம். அதனால் விளைநிலங்களில் கூட பாறைகள் இருப்பது சகஜம். பாறை எதன் மீதோ கலப்பை மோதி விட்டது என்று நினைத்தவர் தன் பணியை தொடர ஆரம்பித்தார்.

வேலை முடிந்து கூழ் குடிக்க திரும்பியவர் நிலமெல்லாம் ரத்தமாக இருப்பதை பார்த்து அதிர்ந்தார். கலப்பை ஒரு பாறை மீது மோதியதல்லவா? அந்தப் பகுதியில் இருந்து இரத்தம் ஊற்றெடுத்து வயலை சிகப்பாக்கிக் கொண்டிருந்தது. அக்கம் பக்கம் வயல்களில் வேலை பார்த்தவர்கள் ஓடிவந்து அந்த இடத்தை பார்வையிட்டார்கள். ஒரு கல்லில் இருந்து இரத்தம் வடிவது அவர்களுக்கு அதிசயமாக இருந்தது.

ஒரு கிராமத்துப் பெரியவரின் ஆலோசனையின் படி அந்த கல்லை தோண்டி எடுக்க ஆரம்பித்தார்கள். என்ன அதிசயம்? அது கல்லல்ல... அம்மன்! இவ்வளவு நாளும் தங்களுக்கு வேப்பமரம் மூலமாக பிரார்த்தனைகள் நிறைவேறியதன் காரணத்தை கண்டு கொண்டார்கள். அம்மனை அந்த வேம்புவுக்கு அருகிலேயே பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பினார்கள்.

இன்று வரை வேம்புலியம்மன் பழவந்தாங்கலில் பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் கேட்பதை தங்குதடையில்லாமல் வழங்கிக் கொண்டிருக்கிறார். வேம்புலியம்மன் திருக்கோயிலுக்கு செல்ல வேண்டுமானால் சென்னைக்கு அருகில் இருக்கும் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி நடந்து செல்லலாம்.

தீப்பாய்ந்த மங்கம்மாள்!

சுமார் நாலு நூற்றாண்டுகளுக்கு முன்னர் காஞ்சிபுரம் அருகில் நடந்ததாக நம்பப்படும் கதை. மங்கம்மாள் என்பவரும் அவர் கணவர் மங்கபதி என்பவரும் காஞ்சிபுரம் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசித்து வந்த அன்பான தம்பதிகள். மங்கபதி அவர்களின் பங்காளிகள் அவரது செல்வச் செழிப்பையும், வளமான வாழ்க்கையையும் கண்டு பொறாமை கொண்டார்கள். சூழ்ச்சி செய்து மங்கபதி அவர்களை ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில் கொலை செய்தார்கள்.

இடுகாட்டில் மங்கபதியின் உடல் எரிக்கப்படும்போது அவரது துணைவியார் மங்கம்மாள் "தன் கணவரின் மரணத்துக்கு காரணமானவர்களை பழிவாங்குவேன்" என்று சபதம் ஏற்று கணவரின் சிதையில் உடன்கட்டை ஏறினார். ஜோதியாக மறைந்ததாகவும் சொல்கிறார்கள். மூடநம்பிக்கைகள் மலிந்திருந்த அந்த காலக்கட்டத்தில் உடன்கட்டை என்பது சமூகத்தில் அத்தியாவசியமானதாக கருதப்பட்டதும் மக்களால் சகஜமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுமாக இருந்திருக்கிறது.

மங்கம்மாள் - மங்கபதி இறந்த சில காலத்திற்குள்ளாகவே மங்கபதியை கொலை செய்த அவரது பங்காளிகள் ஒவ்வொருவராக அனைவருமே ஏதோ ஒரு முறையில் உயிரிழந்திருக்கிறார்கள். மங்கம்மாளின் உடன்கட்டை சபதமும் நிறைவேறியிருக்கிறது.

இச்சம்பவம் நிகழ்ந்து பல வருடங்கள் கழித்து காஞ்சிபுரத்துக்கு சில வணிகர்கள் வந்திருக்கிறார்கள். முத்து மற்றும் தங்க வியாபாரிகளான அவர்கள் காஞ்சிபுரத்தில் வந்த வேலையை முடித்து விட்டு மேற்குப் பக்கமாக பயணம் செய்திருக்கிறார்கள். பணம் கொழிக்கும் வியாபாரம் செய்யும் இதுபோன்ற வியாபாரிகளை குறிவைத்து கொள்ளைக்காரர்கள் கொள்ளை நடத்துவது வழக்கமே.

இரவுவேளை ஆகிவிட்டதால் எங்கேயாவது பாதுகாப்பாக தங்கவேண்டும் என்று அந்த வியாபாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் பார்வையில் விளக்கெரிந்த ஒரு குடிசை தென்பட்டதாம். அந்த குடிசைக்கு சென்றவர்கள் அங்கிருந்த மஞ்சள் சேலை அணிந்த அம்மையார் ஒருவரிடம் தங்கள் நகை மூட்டையை கொடுத்து இன்று ஒரு இரவு மட்டும் குடிசைக்குள் வைத்து பாதுகாக்கும்படி வேண்டியிருக்கிறார்கள். அந்த அம்மையாரும் இவர்கள் வேண்டுகோளை ஏற்று இவர்கள் பசியாற உணவு படைத்து, தங்குவதற்கு திண்ணையில் போதிய இடவசதியும் செய்து தந்திருக்கிறார்.

பயண அலுப்பில் இருந்த வியாபாரிகள் அங்கேயே உறங்கி விட்டிருக்கிறார்கள். பொழுது விடிந்திருக்கிறது. கண்மலர்ந்த வியாபாரிகள் தாங்கள் ஒரு இடுகாட்டின் மத்தியில் படுத்திருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். தங்கள் நகை மூட்டை எங்கே என்று அச்சப்பட்டவர்கள் அது தங்கள் தலைக்கு அருகே பத்திரமாக இருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

இரவு தங்களை உபசரித்த அம்மையாரும், தங்கியிருந்த குடிசையும் எங்கே என்று குழம்பித் தவித்திருக்கிறார்கள். அருகிலிருந்த கிராமத்தில் சென்று விசாரித்தவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஒரு வழியாக வியாபாரத்தை முடித்து அந்த வியாபாரிகள் குழப்பமான மனநிலையுடனேயே ஊர் திரும்பினார்கள்.

சில நாட்கள் கழித்து அந்த வியாபாரிகளில் ஒருவரின் கனவில் அதே மஞ்சள் சேலை அம்மையார் வந்து தன் பெயர் மங்கம்மாள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தன்னுடைய கதையை சொல்லியிருக்கிறார். தான் அந்த இடுகாட்டில் இருந்துகொண்டே அந்த கிராம மக்களுக்கு அருள்பாலிப்பதாகவும் தனக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கனவினை நம்ப முடியாமல் குழம்பிப்போன அந்த வியாபாரி சக வியாபாரிகளுடன் இவரது கனவை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். வியாபாரிகள் மொத்தமாக சேர்ந்து அதே கிராமத்துக்குச் சென்று இந்த கனவினைப் பற்றி கிராமப் பெரியவர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். அந்த கிராமப் பெரியவர்களும் இந்த சம்பவம் நடந்ததை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

அதன்பிறகு வியாபாரிகள் ஒன்று சேர்ந்து இடுகாடு என்று சொல்லப்பட்ட அந்த இடத்தில் "தீப்பாய்ந்த மங்கம்மாளுக்காக" ஒரு கோயில் கட்டியிருக்கிறார்கள். வேகவதி ஆற்றங்கரையின் மேற்கே திருப்பருத்திக்குன்றம் என்ற கிராமத்தில் அமைந்த அந்தக் கோயிலில் இன்னமும் மங்கம்மாள் தன் பக்தர்களுக்காக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். ஆண்டாண்டு ஆடி மாதம் மங்கம்மாள் கோயிலில் கூழ் ஊற்றப்படுகிறது. வருடாவருடம் சித்திரை பவுர்ணமி அன்று திருவிழா நடைபெறுகிறது.

மங்கம்மாளை தங்கள் குலதெய்வமாக இன்றும் வழிபட்டுவருபவர்கள் யார் தெரியுமா? மங்கம்மாளால் பழிவாங்கப்பட்ட அவரது பங்காளிகளின் வம்சாவழியினர் தான். தங்கள் குழந்தைகளின் முடியைக் காணிக்கையாக கொடுத்து காதுகுத்துதலை தங்கள் குலதெய்வத்தின் கோயிலில் தான் அந்த சமூகத்தினர் செய்வார்கள்.

"தீப்பாய்ந்த" என்ற வார்த்தை சட்டவிரோதமானது என்று அந்த சமூகத்தின் இளையதலைமுறையினர் கருதியதால் தற்போது "தீப்பாய்ந்த மங்கம்மாள் ஆலயம்" என்பதை மாற்றி "ஸ்ரீமங்கம்மாள் ஆலயம்" என்று பெயர் மாற்றியிருக்கிறார்கள். இந்த ஆலயத்தைப் பற்றிய செய்திகள் சமீபத்தில் ராணி வார இதழ் மற்றும் தினமலர் வாரமலரில் வெளிவந்திருக்கிறது.